Monday, September 16, 2013

ஐ நோ



மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்து முடித்திருந்த நேரம் அது.

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் ஒரு கலை அறிவியல் கல்லூரி இருக்கிறது. என் பெரிய தந்தையார் அங்கே முதல்வராக இருந்தார். இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்டில் ஒரு பேராசிரியர் எம் பில் படிப்பிற்காக விடுப்பில் சென்றதால் தற்காலிகமாக ஓராண்டுக்கு ஒரு டீச்சர் தேவைப்பட்டது. என் பெரிய தந்தையார் என்னை விண்ணப்பிக்க சொன்னதால், நானும் ஒரு அப்ளிகேஷன் போட்டேன். இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்தது. நான் படித்த கல்லூரி பெற்றிருந்த மார்க்குகள் பார்த்து கல்லூரி தாளாளர் உடனே வேலைக்கு சேர சொன்னார்.

கல்லூரியில் இருந்து வெளியேறிய உடனேயே ஆசிரியப்பணி. சிற்றூர் மாணவர்களை சமாளிப்பது கடினம் என்று நிறைய கேள்விப் பட்டிக்கிறேன். கூடவே என்னோடு பள்ளியில் படித்த நிறைய தோழர்கள் அங்கே மாணவர்களாய். பயம் பதட்டம் எல்லாம் கலந்த உணர்வோடு வேலைக்கு சென்றேன்.


பாடம் நடத்துவது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது.  மாணவர்கள் ஸ்பெல்லிங் குறித்து தாறுமாறான கேள்விகள் கேப்பார்கள்.  Indiaங்குற வார்த்தை ï” யில் தொடங்கும் போது Englishக்கு மட்டும் ஏன் “e” வருது? என்றெல்லாம் டவுட்டு எழும் மாணவர்களுக்கு.   பல நேரங்களில் நமக்கு அடிப்படை இலக்கணத்திலேயே சந்தேகம் வந்து விடும்.

காம்போசிஷன் கிளாஸ் தான் எல்லாத்திலும் ஹைலைட். ஏகப்பட்ட குஷியாக இருக்கும். காணாமல் போன சைக்கிளை கண்டிபிடிக்க சொல்லி போலீஸ்  இன்ஸ்பெக்டருக்கு லெட்டர் எழுதுவது கண்டிப்பாக இருக்கும். இப்படித்தான் ஒரு மாணவனுக்கு கட்டுரையை முடிக்கும் முன் கடைசியாக ஒரு டவுட்டு. என்னிடம் "சார் எப்டி சார் முடிக்கணும்?" என்றான். சைக்கிளை கண்டுபிடிச்சு தர சொல்லுப்பா என்றேன். சரி சார் கண்டுபிக்க சொல்லணும், அவ்வளவுதானான்னு அசால்ட்டா அமர்ந்தவன் எழுதிட்டு நோட்டை தந்தான். பாத்து நான் ஷாக் ஆயிட்டேன். ஏன்னா “Please invent my bicycle” என்று எழுதியிருந்தான். என்னத்த சொல்ல?

நான் கேள்விப் பட்ட இன்னொரு விஷயம் இதையெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு ஆக்கிருச்சு.  

முன்பு அங்கு ஒரு முதல்வர் இருந்தாராம். அவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஆங்கிலத் துறைத் தலைவரும் கூட. தமிழ் சரியா வராது.    ஆங்கிலத்தில் நல்ல பண்டிதம். அவரது ஆங்கிலத்தில் மலையாள வாடை தூக்கலாக இருக்கும் என்பார்கள். அவர் ஒரு ஷேக்ஸ்பியர் ஸ்பெஷலிஸ்ட்.  அந்த வகுப்புகளில் ரொம்ப passionate ஆகி விடுவாராம்.

ஷேக்ஸ்பியரின் பிரபலமான ட்ராஜடிகளில் ஒன்று மேக்பெத் (Macbeth). அதில் பிரதான பாத்திரம் (Protagonist) தான் மேக்பெத். அவர் மனைவியின் பெயர் லேடி மேக்பெத் (Lady Macbeth).

அந்த பாடம் நடத்தி முடித்த பின், புரஃபசர் ஏதும் சந்தேகம் இருக்கான்னு கேட்டாராம். ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்தானாம். சந்தோஷத்தோடு சொல்லுப்பா என்னா ஒன் சந்தேகம்? என்றவரைப் பார்த்து அவன் கேட்ட கேள்வி அவரை நிலை குலைய செய்து விட்டதாம். அப்படி என்ன சந்தேகம்னு தானே நெனைக்கிறீங்க. அவன் கேட்டது மாறி மாறி மேக்பெத் லேடி மேக்பத்னு சொல்றீங்களே சார் அது ஆம்பிளையா பொம்பிளையா சார்? என்றானாம். நொந்து போயி இந்த வேலையே வேணாம்னு முடிவு பண்ணிட்டாராம்.

இது நோகடிச்சுன்னா இன்னொரு விஷயம் அவர நொம்பலப் படித்திருச்சாம். 


அந்தக் கல்லூரி வகுப்பறைகள் எல்லாமே பெரிதாக இருக்கும். இரண்டு வழிகள் இருக்கும். ஒரு நாள் அவரு கிளாஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி சில வாலுப் பயலுக பழைய மேசை நாற்காலிகளை ஒரு கதவுக்கு பின்னால் அடுக்கி கதவை சும்மா சாத்தியிருப்பது போல் செய்து விட்டு இன்னொரு வழியாக வெளியேறி விட்டார்கள். வகுப்பிற்குள் நுழைய கதவை தள்ளியவுடன் எல்லாம் கீழே விழுந்து உடையவும் புரஃபசர் கொதித்து விட்டார்.  சில சக ஆசிரியர்களை அழைத்து நடந்ததை சொல்லி இருக்கிறார். எல்லோருக்கும் கோபம் வந்தது. எப்படியும் தப்பு செய்தவனை கண்டுபிடித்து விடவேண்டும் என்றென்னி அனைத்து மாணவர்களையும் வரிசையில் நிற்க வைத்து ஹூ இஸ் கல்ப்ரிட்? (Who is the culprit?) என்று கத்தியிருக்கிறார்கள். 

ஒவ்வொரு மாணவனையும் அருகில் போய் கோபிக்கவும் சிலருக்கு பயம் தொற்றிக் கொண்டது. அதில் ஒருவன் மிகவும் பயந்தவன். அவன் அருகில் போய் “tell me, who is the culprit?என்று கத்தியவுடன் நடுங்கிக்கொண்டே நோ என்றானாம். திரும்ப கேட்டதற்கும் நோ என்றே சொல்லியிருக்கிறான். 

எல்லோர் முன்னால் சொல்ல பயப்படுகிறான் போல என்று ஒரு சார் சொல்லவும் சரி என்று அவனை பிரின்சிபல் ரூமுக்கு கூட்டிச் சென்றார்கள். அங்கே ஒருவர் பதமாக பேசி எப்படியும் பதிலை வாங்குகிறேன் என்று சொல்லி “சொல்லுப்பா, யாருப்பா அது?” என்றவுடன் சற்றே பயம் தெளிந்து “சார் அப்ப புடிச்சு சொல்லிகிட்டுருக்கேன் கேக்க மாட்டேங்குறாங்க சார். நான் இல்ல சார். “I NO” ன்னு எத்தனவ தடவ சார் சொல்றது?” என்றானாம். சீரியசான அந்த இடம் உடனே சிரிப்பொலியால் நிறைந்ததாம்.  


அந்த ஆண்டே வேலையை ரிஸைன் செயது சொந்த நாட்டுக்கு போன அந்த முதல்வர் அதன் பிறகு ஒரு முறை கூட அந்த சைடு வரவில்லையாம்.
  

4 comments:

  1. ஐ நோ ஐ நோ ஐ நோ
    உன் பிறந்த நாளில் பிறக்கும் உன் பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ஆல்ஃபி. உன் வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகம் தரும் டானிக்.

    ReplyDelete
  3. நன்றாக வந்திருக்கிறது, இந்த முதல் பதிப்பு! (என்ன, ஆங்கில வகுப்பில் நாங்கள் செய்த பல அலும்புகளும் சேர்ந்து ஞாபகம் வருகிறது...:) )...

    உன் பதிப்புப் பணி தொடர
    எம் வாழ்த்துக்களுடனும்
    எதிர்பார்புக்களுடனும்... நாங்கள்...

    பி.கு - செயத் ஒரு ஆங்கில பேராசிரியர் என்கின்ற விஷயம் இன்றுதான் எனக்கு தெரியும் :)...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மூர்த்தி. தொடர்ந்து படித்து உன் கருத்துக்களை பகிரவும்.

      Delete